7. மக்கட்பேறு |
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
(61)
விளக்கம்:பெறுகின்ற செல்வங்களாகிய அவற்றுள், அறிவறிந்த மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்ததாக, பிற எதனையும் யாம் கருதுவதில்லை.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
(62)
விளக்கம்:பழிச்சொல் ஏற்படாத நற்பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால், ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் தீவினைப்பயன்களாகிய துன்பங்கள் அணுகா.
தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
(63)
விளக்கம்:நம்முடைய சொத்து என்று போற்றுவதற்கு உரியவர் நமது குழந்தைகளே ஆவர். மக்களாகிய அவரர்களுடைய சொத்துக்கள், செல்வங்கள், அவரவர் வினைப்பயனால் வந்தடையும்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
(64)
விளக்கம்:தம்முடைய குழந்தைகளின் சின்னஞ்சிறு கைகளால் கிடைக்கும் மிகவும் எளிமையுடைய கூழேயானாலும் கூட, அது பெற்றோருக்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும்.
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
(65)
விளக்கம்:தம் மக்களின் உடம்பைத் தொடுதல் உடலுக்கு இன்பமாகும் அவர்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு மிகுந்த இன்பமாகும்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
(66)
விளக்கம்:தம் மக்களின் மழலைப் பேச்சைக் கேட்டு இன்புறாதவர்களே, குழலிசை இனியது, யாழிசை இனியது என்று புகழ்ந்து கூறுவார்கள்.
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
(67)
விளக்கம்:ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் நல்ல உதவி, அவனைக் கற்றோர் அவையிலே முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலே ஆகும்.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
(68)
விளக்கம்:தம்மைக் காட்டினும், தம் மக்கள் அறிவுடையவராக விளக்கம் பெறுதல், பெற்றோருக்கு மட்டுமல்லாமல், பெரிய உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் இனிமையானது ஆகும்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
(69)
விளக்கம்:தன் மகனைச் சான்றாளன் என்று பலரும் போற்றுவதைக் கேள்வியுறும் தாய், அவனைப் பெற்ற பொழுதிலும் பெரிதாக மகிழ்வாள்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனுஞ் சொல்.
(70)
விளக்கம்:மகன், தந்தைக்குச் செய்யும் உதவி இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன நோன்பு செய்தானோ என்னும் புகழ்ச் சொல்லே ஆகும்.
No comments:
Post a Comment