Sunday, May 31, 2009

87. பகைமாட்சி

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை.
(861)
விளக்கம்:

தம்மைவிட வலியவருக்கு பகையாகி அவரை எதிர்த்தலைக் கைவிட வேண்டும். தம்மினும் மெலியவருக்கு பகையாமல் இருப்பதை விடாமல் கொள்ள வேண்டும்.


அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலாள் துப்பு.
(862)
விளக்கம்:

தம்மைவிட வலியவருக்குப் பகையாகி அவரை எதிர்த்தலைக் கைவிடல் வேண்டும். தம்மினும் மெலியவருக்குப் பகையாவதை விடாமல் கொள்வதற்கு விரும்ப வேண்டும்.

அஞ்சும அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
(863)
விளக்கம்:

அஞ்சுபவன், அறிய வேண்டுவதை அறியாதவன், பிறருடன் பொருந்தாதவன், எவருக்கும் கொடுத்து உதவாதவன், பகைவருக்கு அழிப்பதற்கு எளியவனாவான்.

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
(864)
விளக்கம்:

நீங்காத சினத்தை உடையவன், நிறைவான மனவலிமை இல்லாதவன் ஆகிய ஒருவன் மீது பகைத்து வெற்றியடைதல், எக்காலத்திலும் எவர்க்கும் எளிதாகும்.

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.
(865)
விளக்கம்:

நீதி நூல்களைக் கல்லாதவன், அவை விதித்த செயல்களைச் செய்யாதவன், தனக்கு வரும் பழியைப் பாராதவன், பண்பற்றவன் ஆகியவனைப் பகைத்தலும் இனிதாகும்.

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
(866)
விளக்கம்:

தன்னையும் பிறரையும் அறியாமைக்கு காரணமாக சினம் கொண்டவன், மேன்மேலும் பெருகும் காமத்தான் பகைமை, பிறரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படும்.

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
(867)
விளக்கம்:

தொடங்கும் போது உடனிருந்து, பின் கேடுகளைச் செய்பவன் பகைமையை, சில பொருள்களை அழியும்படி கொடுத்தாவது உறுதியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இளனிலனாம் ஏமாப்பு உடைத்து.
(868)
விளக்கம்:

நல்ல குணம் எதுவும் இல்லாதவனாய், குற்றங்களும் பலவாக உள்ளவன், எவ்வகைத் துணையுமே இல்லாதவன் ஆவான். அப்படி இல்லாததே அவன் பகைவருக்குத் துணையாகும்.

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
(869)
விளக்கம்:

நீதியை அறிதல் இல்லாதவரும் அஞ்சுபவரும் ஆகியவரைப் பெற்றால், அவரைப் பகைத்தவர்க்கு உயர்ந்த இன்பங்கள் எல்லாம் சென்று நீங்காமல் பொருந்தியிருக்கும்.

கல்லான் வெகுளுஞ் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி.
(870)
விளக்கம்:

நீதி நூலைக் கல்லாதவனோடு பகை கொண்டு அழிப்பதனால் வரும் சிறு பொருளை, எப்போதும் தான் அடைவதற்கு நினையாதவனை, வெற்றிப் புகழும் சேர்ந்திருக்காது.

No comments:

Post a Comment