Sunday, May 31, 2009

44. குற்றம் கடிதல்

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
(431)
விளக்கம்:

செருக்கும், சினமும், சிறுமைக் குணமும் இல்லாதவருடைய பெருஞ் செல்வமானது சான்றோரால் மதிக்கப்படும் தன்மையை உடையது ஆகும்.


இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
(432)
விளக்கம்:

ஈயாத உலோபமும், மாட்சியில்லாத மானவுணர்வும், தகுதியில்லாத உவகையும் தலைவனாக இருப்பவனுக்குக் கேடுதரும் குற்றங்கள் ஆகும்.

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
(433)
விளக்கம்:

பழிச்சொல்லுக்கு வெட்கப்படுகின்றவர்கள், தினை அளவான சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும், அதனைப் பனையளவு பெரிதாகக் கருதி வருந்துவார்கள்.

குற்றமே காக்க பொருளாக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.
(434)
விளக்கம்:

தனக்கு முடிவைத்தருகின்ற கொடிய பகை குற்றமே; ஆகவே, குற்றம் செய்யாதிருப்பதே பொருளாகத் தன்னை எப்போதும் காத்துக்கொள்க.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
(435)
விளக்கம்:

குற்றம் வரும் முன்பே, வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கையானது,நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர் போலக் கெடும்.

தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.
(436)
விளக்கம்:

தன் குற்றத்தையும் வராமல் நீக்கி, பிறர் குற்றங்களையும் கண்டறிந்து நீக்குவானானால், அரசனுக்கு என்ன குற்றம் உண்டாகும்.

செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
(437)
விளக்கம்:

செல்வம் பெற்றபோது அதனாலே செய்யவேண்டிய செயல்களைச் செய்யாமல் தவறியவனுடைய செல்வமானது, நிலைக்கும் தன்மையற்று, அழியும்.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன்று அன்று.
(438)
விளக்கம்:

செல்வத்தின் மேல் பற்றுக்கொண்ட உள்ளம் எனப்படும் கஞ்சத்தனம், எந்தக் குற்றங்களோடும் எண்ணப்படும் ஒன்றாக இல்லாமற், பெருங் குற்றமாகும்.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
(439)
விளக்கம்:

எப்போதும் தன்னையே வியந்து பேசுதல் கூடாது; நன்மை பயவாத செயல்களை ஒருபோதும் செய்ய விரும்புதலும் செய்தலும் கூடாது.

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
(440)
விளக்கம்:

தன் விருப்பத்தைப் பிறர் அறியாதபடி நுகர வல்லவனானால், அவனைப் பகைத்தவர் செய்யும் சூழ்ச்சிகள் எல்லாம் பயனில்லாமல் அழிந்து போகும்.

No comments:

Post a Comment