Sunday, May 31, 2009

122. கனவுநிலை உரைத்தல்

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
(1211)
விளக்கம்:

பிரிவால் வருந்திய நான் அயர்ந்து கண் உறங்கியபோது, காதலர் அனுப்பிய தூதொடும் வந்த கனவுக்கு, யான் விருந்தாக என்னகைம்மாறு செய்யப் போகிறேன்.


கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
(1212)
விளக்கம்:

யான் விரும்பும் போது என் கண்கள் தூங்குமானால், கனவில் வந்து தோன்றும் காதலருக்கு, யான் தப்பிப் பிழைத்திருக்கும்உண்மையைச் செய்வேன்.

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
(1213)
விளக்கம்:

நனவிலே வந்து நமக்கு அன்பு செய்யாதிருக்கின்ற காதலரை, கனவிலாவது கண்டு மகிழ்வதனால்தான், என் உயிரும் இன்னமும்போகாமல் இருக்கின்றது.

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
(1214)
விளக்கம்:

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடிக்கொண்டு வருவதற்காகவே, அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் கனவில் வந்துநமக்குத் தோன்றுகின்றன.

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
(1215)
விளக்கம்:

முன்பு நனவில் கண்ட இன்பமும், அந்தப் பொழுதளவிலேயே இனிதாயிருந்தது; இப்பொழுது காணும் கனவும், காணும் அந்தப்பொழுதிலே நமக்கு இனிதாகவே உள்ளது.

நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
(1216)
விளக்கம்:

நனவு என்று சொல்லப்படும் ஒன்று இல்லையானால், கனவில் வருகின்ற நம் காதலர் நம்மை விட்டு எப்போதுமே பிரியாதிருப்பார்அல்லவோ.

நனவினால் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது.
(1217)
விளக்கம்:

நனவில் வந்து நமக்கு அன்பு செய்வதற்கு அன்பு செய்வதற்கு நினையாத கொடுமையாளரான காதலர், கனவிலே வந்து மட்டும்நம்மை வருத்துவதுதான் எதனாலோ?

துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
(1218)
விளக்கம்:

தூங்கும்போது கனவிலே என் தோள் மேலராகக் காதலர் வந்திருப்பார்; விழித்து எழும்போதோ, விரைவாக என் நெஞ்சில்உள்ளவராக இருப்பார்.

நனவினால் நல்காரை நோவார் கனவினாற்
காதலர்க் காணா தவர்.
(1219)
விளக்கம்:

கனவிலே காதலரை வரக் காணாத மகளிரே, நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் குறித்து வருத்தப்பட்டு, மனம் நொந்துகொள்வார்கள்.

நனவினால் நந்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
(1220)
விளக்கம்:

'நனவிலே நம்மை விட்டுப் பிரிந்து போனார் ' என்று அவரைப் பற்றி இவ்வூரார் பழித்துப் பேசுகின்றார்களே! இவர்கள் எம்போல்கனவில் தம் காதலரைக் காண்பதில்லையோ ?

No comments:

Post a Comment