Sunday, May 31, 2009

69. தூது

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
(681)
விளக்கம்:

தன் நாட்டின் மீது அன்பும், உயர்ந்த குடிப்பிறப்பும், வேந்தன் விரும்புகின்ற உயர்ந்த பண்புகள் அமைதலும் தூது உரைப்பவனுக்கு வேண்டிய பண்புகள்.


அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
(682)
விளக்கம்:

தன் நாட்டிடத்திலே அன்பும், தெளிவான அறிவும், எதையும் ஆராய்ந்து பேசும் சொல்வன்மையும் தூது உரைப்பவனுக்கு இன்றியமையாத மூன்று தகுதிகள்.

நூலாறுள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
(683)
விளக்கம்:

அரசியல் நூல்கள் அறிந்தவருள் தான் வல்லவனாதலும், வேல் வீரர்களுள் வெற்றித்திறனைக் கொண்டவனாக இருத்தலும், தூது உடையவனுக்கு வேண்டிய சிறந்த தகுதிகள்.

அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.
(684)
விளக்கம்:

இயல்பாகவே அமைந்த நுண்ணறிவும், தோற்றக் கவரச்சியும், ஆராய்ந்து பெற்ற கல்வியறிவும் என்னும் இம்மூன்றின் செறிவை உடையவனே தூது உரைப்பவன் ஆவான்.

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.
(685)
விளக்கம்:

விரிக்காமல் தொகுத்து சொல்லியும், இன்னாச் சொற்களை நீக்கியும், கேட்கும் மாற்றார் மகிழுமாறு சுபைடச் சொல்லியும், தன் நாட்டிற்கு நன்மை விளைவிப்பனே தூதன்.

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.
(686)
விளக்கம்:

கற்பன கற்றறிந்து, அவரது கடும்பார்வைக்கு அஞ்சாமல், சொல்வதை அவர்கள் மனத்திற் பதியும்படி சொல்லிக் காலத்தோடு பொருந்துவதை அறிபவனே தூதன்.

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி யுரைப்பான் தலை.
(687)
விளக்கம்:

தன் கடமையை அறிந்து, நிறைவேற்றும் காலத்தையும் கருத்திற்கொண்டு, ஏற்ற இடத்தையும் தெரிந்து, நன்றாக சிந்தித்து சொல்பவனே தூதன்.

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
(688)
விளக்கம்:

நடத்தையிலே தூய்மையும், தக்க துணைவரை உடைமையும், மனத்திலே துணிவு உடைமையும் ஆகிய இம்மூன்றினையும் வாய்த்திருப்பவனாக விளங்குதலே தூதனின் பண்பு.

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்.
(689)
விளக்கம்:

தன் அரசன் சொல்லியனுப்பிதைப் பிற வேந்தரிடம் சென்று உரைப்பவனாகிய தூதன், வடுப்படும் சொல்லை வாய்சோர்ந்தும் சொல்லாத திறன் உடையவனாக இருக்க வேண்டும்.

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.
(690)
விளக்கம்:

தன் உயிருக்கே முடிவைத் தந்தாலும், அதற்கு அஞ்சித் தன் கடமையிலே குறைவு படாது, தன் வேந்தனுக்கு நன்மை தரும் உறுதிப்பாட்டைச் செய்து முடிப்பவனே தூதன்.

No comments:

Post a Comment