Sunday, May 31, 2009

88. பகைத்திறம் தெரிதல்

பகையெனும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று.
(871)
விளக்கம்:

"பகை" என்று கூறப்படும் தீமை தருவதனை ஒருவன் விளையாட்டிடத்தில் என்றாலும் விரும்புதல் நன்மையாகாது. இதுவே நீதி நூல்களின் முடிந்த முடிபாகும்.


வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.
(872)
விளக்கம்:

வில்லை ஏராகவுடைய உழவரான மறவரோடு பகை கொண்டாலும், சொல்லை ஏராகவுடைய உழவரான நுண்ணறிவை உடையவரோடு பகை கொள்ளக் கூடாது.

ஏழுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
(873)
விளக்கம்:

தான் துணைவலிமை இல்லாமல் தனியனாய் இருப்பதறிந்தும், பலருடன் பகைகொண்டு வாழும் அறிவற்றவன், பித்துற்ற மக்களிலும் அறிவிழந்தவன் ஆவான்.

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.
(874)
விளக்கம்:

தான் வேண்டும்போது, தன் பகைவருள் சிலரைப் பிரிந்து நண்பராக்கிக் கொள்ளும் சூழ்ச்சித் திறனுடைய அரசனின் பெருமையினுள்ளே இவ்வுலகமே அடங்கி விடும்.

தன்துணை யின்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றி னொன்று.
(875)
விளக்கம்:

"தனக்கு ஒரு துணை இல்லை, பகையோ எனில் இரண்டு" என்னும்போது அதனுள் ஒன்றை அப்போதைக்கு தனக்கு இனிய துணையாகுமாறு செய்துகொள்ளல் வேண்டும்.

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
(876)
விளக்கம்:

பகைவனை முன்பே தெளிந்தாலும் தெளியாவிட்டாலும், தனக்கு மற்றொரு செயலினாலே தாழ்வு வந்தவிடத்து அவரைக் கூடாதும் நீக்காதும் விட்டு வைக்க வேண்டும்.

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து.
(877)
விளக்கம்:

தான் நொந்ததைத் தாமாகவே அறியாத நண்பருக்குச் சொல்ல வேண்டாம். வலியிழந்த நேரத்தை எதிர்பார்க்கும் பகைவரிடம் தன் மெலிவையும் புலப்படுத்த வேண்டாம்.

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.
(878)
விளக்கம்:

தான் செய்யும் செயலின் வகையை அறிந்து, அது முடிவதற்கு ஏற்றபடி தன்னைப் பெருக்கிச் சோம்பல் புகாமல் காக்கவே, பகைவரிடம் உள்ள செருக்குத் தானே தேய்ந்துவிடும்.

இளைதாக முன்மரங் கொல்க களையுநர்
கைகொல்லுங் காழ்த்த விடத்து.
(879)
விளக்கம்:

களைய வேண்டிய முன்மரத்தை அது இளைதான பொழுதே களைந்து விடுக. முதிர்ந்த பின் அதைக் களைதலைச் செய்தால் அது களைபவர் கையினைத் தான் களைந்து விடும்.

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
(880)
விளக்கம்:

பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியான அதனைச் செய்யாத அரசர் பின்னர் உயிரோடு இருப்பதற்கும் உரியவர் ஆகார்.

No comments:

Post a Comment