Sunday, May 31, 2009

100. பண்புடைமை

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
(991)
விளக்கம்:

எல்லாரிடத்தும் எளிய செவ்வியராதல் உடையவருக்கு, பண்புடைமை என்னும் நன்னெறியினை அடைந்து சிறப்படைதலும், எளிதென்று சொல்லுவார்கள்.


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
(992)
விளக்கம்:

பிறர்மேல் அன்புடைமையும், உலகத்தோடு அமைந்த குடியிலே பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும் ஒத்து வருதல் பண்புடைமையால் என்று உலகத்தார் சொல்லுவர்.

உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
(993)
விளக்கம்:

உடம்பால் ஒருவரோடு ஒருவர் ஒத்திருத்தல், ஒருவனுக்கு நல்லவரோடு சமநிலையைத் தந்துவிடாது. செறியத் தகுந்த பண்பால் ஒத்திருத்தலே சமநிலை தரும்.

நயனோடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு.
(994)
விளக்கம்:

நீதியையும் அறத்தையும் விரும்புதலால், பிறருக்கும் தமக்கும் பயன்படுதலை உடையவரது பண்பினை, உலகத்தார் அனைவரும் போற்றிக் கொண்டாடிப் புகழ்வார்கள்.

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
(995)
விளக்கம்:

தன்னை இகழ்தல் விளையாட்டின்போதும் துன்பமானது. ஆகவே, பாடு அறிவாரிடத்து பகைமை உள்ளவிடத்திலும் இகழ்தல் இன்றி, இனிய பண்புகளே நிறைந்திடும்.

பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
(996)
விளக்கம்:

பண்புடையாரிடத்தே படுதலால் உலகியல் எப்போதும் உளதானதாய் வந்து கொண்டிருக்கின்றது. அங்ஙனம் இல்லையானால், அது மண்ணினுட் புகுந்து மாய்ந்து விடும்.

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
(997)
விளக்கம்:

நன்மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர்கள், அரத்தைப் போலக் கூர்மை உடையவர் என்றாலும், ஓரறிவேயுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர்.

நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை.
(998)
விளக்கம்:

தம்மோடும் நட்பினைச் செய்யாதவராகப் பகைமையையே செய்து நடப்பவரிடத்தும், தாம் பண்புடையவராக உதவி புரியாதிருத்தல், சான்றோருக்குக் குற்றமாகும்.

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
(999)
விளக்கம்:

பண்பில்லாமையாலே ஒருவரோடு கலந்து பேசி உள்ளம் மகிழமாட்டாதவர்களுக்கு, மிகவும் பெரிய இந்த உலகமானது பகற்பொழுதிலும் இருண்டு கிடப்பதாகும்.

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
பகலும்பாற் பட்டன்று இருள்.
(1000)
விளக்கம்:

பண்பில்லாதவன் முன்னை நல்வினையாலே பெற்ற பெருஞ்செல்வமானது, நல்ல ஆவின்பால் கலத்தின் குற்றத்தால் திரிதல்போல, ஒருவருக்கும் பயன்படாமல் போகும்.

No comments:

Post a Comment