Sunday, May 31, 2009

82. தீ நட்பு

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
(811)
விளக்கம்:

நம்மை அள்ளிப் பருகுவர்போல அன்பு காட்டினாலும், நல்ல பண்பில்லாத தீயோரது நட்பானது நாளுக்கு நாள் பெருகுவதை விடக் குறைந்து போவதே இனியது.


உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.
(812)
விளக்கம்:

செல்வம் உண்டானால் நட்புச் செய்தும், அது போனால் விலகியும் போகின்ற ஒத்த தன்மையில்லாத தீயோரின் நட்பினைப் பெற்றாலும் இழந்தாலும் ஒன்று தான்.

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
(813)
விளக்கம்:

தாம் அடைவதையே சீர்தூக்கிப் பார்த்திருக்கும் நட்பும், தாம் பெறுவதைக் கொள்ளும் விலைமகளிரும், நம் பொருளைக் களவாடும் கள்வரும், ஒரே தன்மையினரே.

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
(814)
விளக்கம்:

போர்க்களத்தின் இடையில் நண்பரை விட்டுவிட்டுத் தாம் ஓடிப் போய்விடும், கல்லாத விலங்கு போன்றவரின் நட்பை விடத் தனிமையே மிகவும் சிறந்தது.

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
(815)
விளக்கம்:

நமக்குத் துன்பம் வந்தபோது உதவி செய்து காப்பாற்றுவதற்கு வராத சிறுமையாளரது புன்மையான நட்பை அடைதலை விட அடையாததே நன்மையாகும்.

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி யுறும்.
(816)
விளக்கம்:

பேதையாளனது மிகவும் செறிவான நட்பைக் காட்டிலும் அறிவுடையவர்களின் தொடர்பு இல்லாமல் இருப்பது ஒருவனுக்கு கோடி நன்மை தருவதாக விளங்கும்.

நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி யுறும்.
(817)
விளக்கம்:

வெற்றுரை பேசிச் சிரித்து மகிழ்வதற்கு மட்டுமே பயன்படும் தீயோரின் நட்பைக் காட்டிலும், பகைவராலே பத்துக் கோடிக்கும் மேலான நன்மை நமக்குக் கிடைக்கும்.

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
(818)
விளக்கம்:

நம்மாலே செய்து முடிக்கக் கூடிய செயலையும் செய்ய விடாமல் வீண் பொழுது போக்குபவரது நட்பு உறவை மற்றும் அவருடன் பேசுவதைக் கைவிட்டு நீக்கிவிட வேண்டும்.

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
(819)
விளக்கம்:

நம்மாலே செய்து முடிக்கக் கூடிய செயலையும் செய்ய விடாமல் வீண் பொழுது போக்குபவரது நட்பு உறவை மற்றும் அவருடன் பேசுவதைக் கைவிட்டு நீக்கிவிட வேண்டும்.

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு.
(820)
விளக்கம்:

வீட்டிலுள்ள போது நட்புரிமை பேசிவிட்டு, பொதுமன்றிலே பழித்துப் பேசுபவரின் தொடர்பு, எந்தச் சிறிய அளவுக்கேனும் நம்மை அடையாதபடி காத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment