போகூழால் தோன்றும் மடி.
(371)
விளக்கம்:ஆவதற்குரிய ஊழ் வந்தால் சோர்வில்லாத முயற்சிகள் தோன்றும்; கைப்பொருள் போவதற்குரிய ஊழ் வந்தால் சோம்பல் தோன்றும்.
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.
(372)
விளக்கம்:இழப்பதற்கான ஊழ் ஒருவனைப் பேதையாக்கும்; ஆவதற்கான ஊழ் வந்தால் ஒருவனது அறிவை விரிவாக்கி அவனுக்குப் பல நன்மைகளைத் தரும்.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.
(373)
விளக்கம்:நுண்மையான நூல்கள் பலவற்றை முயன்று கற்றாலும், ஊழின் நிலைமைக்குத் தகுந்தபடி உள்ளதாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
(374)
விளக்கம்:ஊழின் காரணத்தால் உலகத்து இயற்கையானது இருவேறு வகைப்படும்; செல்வராதல் வேறு ஊழ்; தெளிவான அறிவினராதல் வேறு ஊழ் ஆகும்.
நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
(375)
விளக்கம்:செல்வம் தேடும் முயற்சிக்கு, நல்லூழால் தீயவும் நல்லவையாவதும், தீயூழால் நல்லவைகளும் தீயவை தருகின்ற தன்மையாவதாலும், உண்டு.
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
(376)
விளக்கம்:வருந்திக் காப்பாற்ற முயன்றாலும் நல்லூழ் இல்லாதபோது எதுவுமே ஆகாது; கொண்டுபோய் வெளியே சொரிந்தாலும் நல்லூழிருந்தால் நம் பொருள் போகாது.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அறிது.
(377)
விளக்கம்:ஊழை வகுத்தவன் வகுத்துவிட்ட வகைப்படி அல்லாமல், கோடியாகப் பொருள் தொகுத்தவர்க்கும் அவற்றைத் துய்த்தல் என்பது அரிதாகும்.
துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.
(378)
விளக்கம்:வந்தடைவதான இன்பங்கள் வந்து சேராமற் போகுமானால், துய்க்கும் பொருள் இல்லாதவர்கள் தம்முடைய ஆசைகளைத் துறப்பார்கள்.
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.
(379)
விளக்கம்:ஊழால் நன்மைகள் விளையும்போது, அவற்றை நல்லவையாகக் காண்பவர்கள், அஃது இல்லாத கேடுகாலத்தில் துன்பப்படுவதுதான் எதற்காக?
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.
(380)
விளக்கம்:ஊழைக் காட்டிலும் பெரிதும் வலிமையானவை யாவை உள்ளன? மற்றொன்றை வலியது என்று கருதினாலும், அங்கும் ஊழே முன்வந்து நிற்கும்.
No comments:
Post a Comment