Sunday, May 31, 2009

59. ஒற்றாடல்

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
(581)
விளக்கம்:

ஒற்றர்களும், புகழ் அமைத்த அறநூலும் என்னும் இந்த இரண்டு பகுதியையுமே, ஒரு மன்னன் தனக்குரிய இருக்கண்களாகக் கொள்ளல் வேண்டும்.


எல்லார்க்கும் எல்லாம் நிகழ்வை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் துணை.
(582)
விளக்கம்:

எல்லாருக்கும் நிகழ்கின்ற எல்லாவற்றையும், எல்லாக்காலத்திலும், மிகவும் விரைவாக ஒற்றர் மூலம் அறிந்து கொள்ளுதல், வேந்தனுக்கு உரிய தொழிலாகும்.

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.
(583)
விளக்கம்:

பகைநாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றர் மூலமாகத் தெரிந்துக்கொண்டு, அவற்றின் பொருளையும் ஆராய்ந்து தெளியாத மன்னன், போரில் வெற்றி கொள்வதற்கு வழியே இல்லை.

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
(584)
விளக்கம்:

அரசன் செயல்களைச் செய்பவர்கள், அரசனுக்கு உரிய சுற்றத்தினர், அரசனை விரும்ாபாத பகைவர், என்று சொல்லப்படும் அனைவயுைம் ஆராய்வதே, ஒற்றரின் கடமை.

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
(585)
விளக்கம்:

சந்தேகப்படாத மாற்றுருவுடன், எவருடைய பார்வைக்கும் அஞ்சாமல், அறிந்ததைத் தன் அரசனைத் தவிரப் பிறருக்கு வெளிப்படுத்தாமலிருக்க வல்லவனே ஒற்றன்.

துறந்தார் படிவத்த ராகி இறந்தாதாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.
(586)
விளக்கம்:

புகமுடியாத இடங்களுக்கும், துறவியர் வேடத்தோடு சென்று, அனைத்தையும் ஆராய்ந்து, எவர் யாது செய்தாலும் அதனால் சோர்வடையாதவனே ஒற்றன்.

மறந்தவை கேட்கவற் றாகி அறுந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
(587)
விளக்கம்:

மறைவான பேச்சுகளையும்கேட்டு அறியக்கூடிய திறமை உள்ளவனாகி, தான் அறிந்தவற்றில் எவிவிதச் சந்தேகமும் இல்லாதவனே நல்ல ஒற்றன்.

ஒற்றொற்றித தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
(588)
விளக்கம்:

ஓர் ஒற்றன் அறிந்து வந்து சொன்ன செய்தியையும், மற்றுமோர் ஒற்றனை ஏவி அறிந்து வருமாறு செய்து, உண்மையை ஒப்பிட்டு அறிதல் வேண்டும்.

ஒற்றொற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப்படும்.
(589)
விளக்கம்:

ஓர் ஒற்றன் மற்றுமோர் ஒற்றனை அறியாதபடி பார்த்துக் கொள்வதோடு, இப்படி மூன்று ஒற்றர் சொல்வதையும் ஓருங்கே ஆராய்ந்தே உண்மை தெளியவேண்டும்.

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தா னாகும் மறை.
(590)
விளக்கம்:

பிறர் அறியும்படியாக ஒற்றனுக்குச் சிறப்புகளைச் செய்யக் கூடாது. செய்தால், மறைக்க வேண்டிய இரகசியத்தை அரசனே வெளிப்படுத்தினவன் ஆவான்.

No comments:

Post a Comment