Sunday, May 31, 2009

60. ஊக்கமுடைமை

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
(591)
விளக்கம்:

ஊக்கம் உடைமையை ' உடையவர் ' என்று சொல்லப்படும் சிறப்புக்கு உரியது, ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் அல்லர்.


உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
(592)
விளக்கம்:

ஊக்கம் உடைமையே ஒருவனது நிலையான செல்வம் ஆகும். மற்றைய செல்வங்கள் எல்லாம் நிலைத்திருக்காமல் ஒரு காலத்தில் நீங்கியும் போய்விடும்.

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.
(593)
விளக்கம்:

உறுதியான ஊக்கத்தையே தம்முடைய கைப்பொருளாகப் பெற்றவர்கள், தாம் செல்வம் இழந்தபோதும், இழந்தோமே என்று நினைத்து வருந்த மாட்டார்கள்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அடைவிலா
ஊக்கம் உடையான் உழை.
(594)
விளக்கம்:

தளராத ஊக்கம் உடையவர்களிடத்திலே, ஆக்கம் தானே அவரிருக்கும் இடத்திற்கு வழகேட்டுக்கொண்டு போய்ச்சென்று, அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
(595)
விளக்கம்:

நீர்ப்பூக்களினது தண்டின் நீளமானது நீரின் ஆழத்தின் அளவினது ஆகும். அது போலவே மக்களின் உயர்வும் அவர்களுடைய ஊக்கத்தின் அளவினதே ஆகும்.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
(596)
விளக்கம்:

உயர்ந்த நிவைகளையே நினைவில் எல்லாரும் நினைத்து வரவேண்டும். அந்த நிலை கை கூடாத போதும், அப்படி நினைப்பதை மட்டும்கை விடவே கூடாது.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
(597)
விளக்கம்:

தன்னுடம்பில் தைத்துள்ள அம்புகளாலே வேதனை அடைந்த போதும், களிறு, தன் பெருமையை நிலை நிறுத்தும். அவ்வாறே ஊக்கமுள்ளவர் அழிவிலும் தளரமாட்டார்கள்.

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
(598)
விளக்கம்:

யாம் வள்ளன்மை உடையோம் என்னும் இறுமாந்த நிலையை, ஊக்கம் இல்லாதவர்கள், இவ்வுலகத்தில் ஒரு போதும் அடையவே மாட்டார்கள்.

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெருஉம் புலிதாக் குறின்.
(599)
விளக்கம்:

பெருத்த உடலும் கூர்மையான கொம்புகளும் இருந்தாலும், யானையானது மனவூக்கமுள்ள புலி தன் மீது பாய்ந்தால், தான் அச்சம் கொள்ளும்.

உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்
மரம் மக்களாதலே வேறு.
(600)
விளக்கம்:

ஒருவனுக்கு உள்ள செல்வம் என்பது ஊக்கமே. அந்த ஊக்கம் ஆசிய செல்வம் இல்லாதவர், உருவத்தால் மக்கள் போலத் தோன்றினாலும், மரங்களைப் போன்றவரே.

No comments:

Post a Comment