Sunday, May 31, 2009

89. உட்பகை

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.
(881)
விளக்கம்:

நிழலும் நீரும் நுகரும் காலத்தில் இன்பமானாலும், பின்னர் நோய் செய்யும். தழுவ வேண்டும் சுற்றத்தாரின் இயல்புகளும் ணிதலில் இனியவாயினும், பின்னர் இன்னாதனவாகும்.


வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
(882)
விளக்கம்:

வாளைப் போல வெளிப்பட்டு நிற்கும் பகைவர்க்கு அஞ்ச வேண்டாம். சுற்றத்தார் போல அன்புகாட்டி உள்ளத்தில் பகைமறைத்து நிற்பவருக்கே அஞ்ச வேண்டும்.

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
(883)
விளக்கம்:

உட்பகையாக விளங்குபவருக்கு அஞ்சி தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். அங்ஙனம் காவாதிருப்பின், தனக்குத் தளர்ச்சி வந்தபோது அவர்கள் கெடுதல் செய்வார்கள்.

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.
(884)
விளக்கம்:

உள்ளத்தில் திருந்தாத உட்பகை தோன்றினால், அரசன் அதனை அப்போதே ஒழிக்க வேண்டும். இல்லையானால், அது சற்றும் வசமாகாதபடி குற்றங்களைத் தந்துவிடும்.

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
(885)
விளக்கம்:

புறத்தே உறவுமுறைத் தன்மையோடு பழகுவாரிடம் உட்பகை தோன்றினால், அது அவனுக்கு இறத்தல் முறைமையோடு கூடிய பல குற்றங்களையும் தரும்.

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.
(886)
விளக்கம்:

தனக்கு உட்பட்டவரிடத்திலேயே பகைமை தோன்றினால், தனக்குச் சாவாதிருப்பது கைகூடுவது என்பதும் எக்காலத்திலும் அரியதாகும்.

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.
(887)
விளக்கம்:

செப்பின் புணர்ச்சி போல வெளிப்பார்வைக்குப் பொருந்தினவர் ஆயினும், உட்பகை உண்டாகிய குடியிலுள்ளவர்கள் தம் உள்ளத்தினாலே ஒன்று கூட மாட்டார்கள்.

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை யுற்ற குடி.
(888)
விளக்கம்:

முன் உயர்ந்து வளர்ந்ததே என்றாலும், உட்பகையுள்ள குடியானது, அரத்தினால் அராவப்பட்ட இரும்பைப் போல் நாளுக்கு நாள் தேய்ந்து அழிந்து போகும்.

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு.
(889)
விளக்கம்:

ஒருவனது உட்பகை அவன் பெருமையை நோக்க, எள்ளின் பிளவுபோன்று சிறிதானது என்றாலும் அதனாலும் அவன் பெருமை எல்லாம் பிற்காலத்தில் கெட்டுவிடும்.

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
(890)
விளக்கம்:

மனம் பொருந்தாதவரோடு கூடியிருந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையுள்ளே பாம்போடு கூடத் தங்கியிருந்து வருந்துவதைப் போன்றதாகும்.

No comments:

Post a Comment