Sunday, May 31, 2009

84. பேதைமை

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டுஊதியம் போக விடல்.
(831)
விளக்கம்:

"பேதைமை" என்பதன் தன்மை என்னவென்றால், ஒன்றைச் செய்யும்போது வரும் துன்பத்தை ஏற்றுக் கொண்டு அதனால் வரும் ஊதியத்தை விட்டுவிடுதல் ஆகும்.


பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்.
(832)
விளக்கம்:

பேதைமை என்பவற்றுள் எல்லாம் பெரிய பேதைமையாவது விரும்பத்தகாத ஒரு செயலைச் செய்யத் தொடங்கி அதையும் பொருத்தமற்ற வகையில் செய்தல் ஆகும்.

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
(833)
விளக்கம்:

பழிக்கு வெட்கப்படாமையும், நன்மைகளை விரும்பாதிருத்தலும், அன்பரிடம் அன்பு கொள்ளாமையும், எதனையும் பேணிக் காவாமையும் பேதையரது தொழிலாகும்.

ஓதி உணர்ந்தும் பிறர்குரைத்தும் தான்அடங்காப்
பேதையிற் பேதையர் இல்.
(834)
விளக்கம்:

நூல்களை முறையாகப் படித்து உணர்ந்தும், பிறர்க்கும் அதை சொல்லி வந்தும், தன் அடக்கத்தைக் கொள்ளாத பேதையிலும் பெரிய பேதையர் உலகில் எவரும் இல்லை.

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
(835)
விளக்கம்:

இந்தப் பிறப்பில் பேதமைச் செயல்களையே செய்து வரும் பேதை, தொடர்ந்து வரும் ஏழு பிறப்பினையும், தான் புகுந்து அழுந்தும் நரகங்களாகவே காண்பான்.

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
(836)
விளக்கம்:

ஒன்றின் செய்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அது பொய்யாகிப் போவதுடன், அவனும் தளைபூண்கின்ற துயரத்தை அடைவான்.

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
(837)
விளக்கம்:

பேதை, தன் முன்வினைப் பயனால் பெருஞ்செல்வத்தை அடைந்த காலத்தில், தொடர்பில்லாத பலரும் நன்றாக அனுபவிக்க, அவன் சுற்றத்தார் பசியால் வாடுவர்.

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.
(838)
விளக்கம்:

பேதை ஒரு பொருளைத் தனது உடைமையாகப் பெற்றால், மயங்கிய ஒருவன் மேன்மேலும் கள்ளைப் பருகியது போல நிலைமாறி வழி தவறி நடப்பான்.

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன்று இல்.
(839)
விளக்கம்:

ஒரு வகையில் பேதையோடு கொள்ளும் தொடர்பும் இனிமை தருவதேயாகும். அது தான் அவனைப் பிரிந்தவிடத்துத் துன்பம் தரும் தன்மை இல்லாதது.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
(840)
விளக்கம்:

சான்றோர்களின் கூட்டத்தில் ஒரு பேதை புகுதலானது, மாசுபடிந்த காலைக் கழுவாமல், தொழுகைக்குரிய பள்ளியினுள்ளே எடுத்து வைப்பது போன்றதாகும்.

No comments:

Post a Comment