Sunday, May 31, 2009

104. உழவு

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
(1031)
விளக்கம்:

"என் குடியை உயரச் செய்வதற்கான செயல்களைச் செய்வதில் ஒருபோதும் கை ஓய மாட்டேன்" என்னும் பெருமையைப் போல், ஒருவனுக்குச் சிறந்த பெருமை தருவது வேறில்லை.


உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
(1032)
விளக்கம்:

உழவைவிட்டுப் பிற தொழில்களைச் செய்வாருக்கும் உணவுப் பொருள்களைத் தந்து தாங்குவதனால், உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி ஆவார்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
(1033)
விளக்கம்:

யாவரும் உண்ணுவதற்கு உணவைத் தந்து, தாமும் உண்டு வாழ்பவரே உரிமை வாழ்வினர். மற்றையவர் பிறரைத் தொழுது உண்டு, அவர் பின் செல்கின்றவரே ஆவர்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
(1034)
விளக்கம்:

உழுதலால் நெல்லுடையவரான கருணையாளர், பலவேந்தர் குடைநிழலது ஆகிய உலகம் முழுவதையும், தம் அரசனின் குடைக்கீழ் வந்து சேரக் காணும் சக்தியுடையவர் ஆவர்.

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
(1035)
விளக்கம்:

உழவான முயற்சியைச் செய்து உண்பதனையே இயல்பாக உடையவர், பிறரைத் தாம் இரவார். தம்பால் வந்து இரப்பவர்க்கும் அவர் வேண்டியதைத் தருவார்கள்.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை.
(1036)
விளக்கம்:

உழவர்களின் கை உழாது மடங்கிவிடுமானால், "யாவரும் விரும்பும் உணவையும் கைவிட்டோம்" என்று துறந்தவர்க்கும், அவ்வறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
(1037)
விளக்கம்:

ஒரு பலப் புழுதியானது காற்பலமாக ஆகும்படி உழுது காயவிடுவானானால், அதனிடம் செய்த பயிர், ஒரு பிடி எருவு இடுதலையும் வேண்டாமலே நன்றாக விளையும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
(1038)
விளக்கம்:

பலகால் உழுதலினும், எருப்பெய்து வளப்படுத்துதால் சிறந்தது. இவ்விரண்டும் செய்து களையும் எடுத்தபின், பயிரைக் காத்தல், நீர் பாய்ச்சுவதிலும் நல்லதாகும்.

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
(1039)
விளக்கம்:

நிலத்துக்கு உரியவன் நாள்தோறும் சென்று பார்த்து, வேண்டியவை செய்யாது சோம்பினால், அந்த நிலமும், அவன் மனைவியைப் போல அவனோடு பிணங்கி விடும்.

இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
(1040)
விளக்கம்:

"யாம் வறியோம்" என்று சொல்லிச் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் என்று உயர்த்துப் பேசப்படும் நல்லாள் தன்னுள்ளே சிரித்துக் கொள்வாள்.

No comments:

Post a Comment