Sunday, May 31, 2009

105. நல்குரவு

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
(1041)
விளக்கம்:

ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாதென்றால், அந்த வறுமையைப் போலத் துன்பம் தருவது அந்த வறுமையேயன்றி யாதுமில்லை.


இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
(1042)
விளக்கம்:

வறுமை என்னும் ஒரு பாவி ஒருவனிடம் வந்துவிட்டால், அவனுக்கு இம்மையிலுள்ள உலக இன்பமும், மறுமையின் சுவர்க்க இன்பமும் இல்லாமல் போய்விடும்.

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.
(1043)
விளக்கம்:

வறுமை எனப்படும் கேடானது, ஒருவனுடைய பழைய குடும்பச் செல்வத்தையும், அதன் மேல் அக்குடும்பத்திற்கு உண்டான பெரும் புகழையும் கெடுத்து விடும்.

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
(1044)
விளக்கம்:

இழிவான சொல் பிறவாத குடும்பத்தாரிடமும், அது பிறப்பதற்கு ஏதுவான சோர்வு என்னும் நிலைமையானது வறுமையை உண்டாக்கிவிடும்.

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
(1045)
விளக்கம்:

வறுமை எனப்படும் துன்பம் ஒன்றின் உள்ளாகவே உலகத்தாரால் சொல்லப்படும் பலவகைப்பட்ட துன்பங்கள் எல்லாம் சென்று அடங்கிவிடும்.

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
(1046)
விளக்கம்:

நல்லவான பொருள்களைத் தெளிவாக அறிந்து சொன்னார் ஆனாலும், வறுமைப்பட்டவர் சொல்லும் சொற்கள், பொருள் பயவாதவாய்ச் சோர்வு பட்டுவிடும்.

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
(1047)
விளக்கம்:

அறத்தோடு பொருந்தாத வறுமையை உடையவன், தன்னைப் பெற்ற தாயாராலுங்கூட ஓர் அயலானைப் போலக் கருதிப் பார்க்கப்படுவான்.

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
(1048)
விளக்கம்:

நேற்றுக் கொன்றதுபோலத் துன்பஞ்செய்த வறுமையானது, இன்றும் என்னிடத்தே வந்து விடுமோ? வந்தால், இனி யான் யாது செய்வேனோ?

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.
(1049)
விளக்கம்:

மந்திரமும் மருந்தும் முதலியவற்றின் உதவியாலே நெருப்பிற் கிடந்தும் உறங்கலாம். ஆனால் வறுமை வந்தபோது எதன் உதவியாலும் உறக்கம் வருவதில்லை.

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
(1050)
விளக்கம்:

பொருளில்லாத வறுமையாளர் செய்யக் கூடியது முற்றத் துறத்தலே. அதனைச் செய்யாதிருப்பது, பிறர் வீட்டு உப்புக்கும் காடிக்கும் தாம் எமனாவதே ஆகும்.

No comments:

Post a Comment