Sunday, May 31, 2009

55. செங்கோன்மை

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
(541)
விளக்கம்:

நடுநிலைமை தவறாமல், யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து, அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாகும்.


வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.
(542)
விளக்கம்:

மழையின் செம்மையை எதிர்பார்த்து உலகத்து உயிர்கள் எல்லாம் வாழும். மன்னவனின் செங்கோன்மையை எதிர்பார்த்துக் குடிகள் வாழ்வார்கள்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
(543)
விளக்கம்:

அந்தணரது நூல்களுக்கும், உலகில் அறம் நிலைப்பதற்கும் அடிப்படையாய் நின்றது, மன்னவனது அறம் தவறாத செங்கோண்மையே ஆகும்.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
(544)
விளக்கம்:

குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் வேந்தனின் அடிகளைத் தழுவி, இவ்வுலகத்து, வாழ்வும் நிலைபெறுவதாகும்.

இயல்புளிக் கோலோச்சும் மாநில மன்னன்
பெயலும் விளையுளும் தொக்கு.
(545)
விளக்கம்:

அரசனுக்குரிய இயல்போடு செங்கோல் செலுத்தும் மன்னவனின் நாட்டிலே, பருவமழையும், விளைபொருள்களும் ஒருங்கே மலிந்திருக்கும்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்.
(546)
விளக்கம்:

மன்னவனுக்கு வெற்றியளிப்பது அவன் கையிலுள்ள வேல் அல்ல; அவன் செங்கோன்மை கோணாமல் இருந்ததானால் அதுவே வெற்றி அளிப்பதாகும்.

இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
(547)
விளக்கம்:

உலகத்தாரை எல்லாம் மன்னவன் காப்பாற்றி வருவான்; முறை தவறாமல் அவன் செங்கோல் செலுத்தி வந்தால், அது அவனைக் காப்பாற்றி நிற்கும்.

எண்பதத்தான் ஓரா ணிறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
(548)
விளக்கம்:

ணிறையிட வருபவரது காட்சிக்கு எளியவனாய் அவர்கள் குறைகளைக் கேட்டு ஆராய்ந்து ணிறை செய்யாத மன்னவன், தாழ்ந்த நிலையிலேயே சென்று தானே கெடுவான்.

குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
(549)
விளக்கம்:

குடிகளைப் பகைவர்களிடத்தில் இருந்து காத்தும், அவர்களுக்கு நன்மை பேணியும், குற்றங்களை நீக்கியும் முறை செய்தால், வேந்தனுக்கு குற்றம் இல்லை. அதுவே அவன் தொழில்.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
(550)
விளக்கம்:

கொடிய செய்வாரைக் கொலைத் தண்டனையால் தண்டித்தும், மற்றவர்களை அருளோடு காத்தும் முறைசெய்தல், பசும் பயிரில் களையெடுப்பது போன்ற சிறந்த செயலாகும்.

No comments:

Post a Comment