Sunday, May 31, 2009

53. சுற்றந் தழால்

பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள.
(521)
விளக்கம்:

ஒருவன் வறுமையாளன் ஆகிய போதும், பழையபடியே அவனிடம் அன்பு பாராட்டுதல் என்பது சுற்றத்தார் இடம் மட்டுமே காணப்படும் தனி இயல்பாகும்.


விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
(522)
விளக்கம்:

அன்பில் நீங்காத சுற்றத்தார் அமைந்தனரானால், அது, குறைவில்லாமல் வளருகின்ற பல செல்வ நலங்களையும் ஒருவனுக்குக் கொடுப்பதாகும்.

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று .
(523)
விளக்கம்:

சுற்றாத்தாரோடு மனங்கலந்து பழகாத ஒருவனுடைய வாழ்வானது, கரையிலாத குளப்பரப்பிலே நீர் நிரம்பினாற் போலப் பயனற்றதாகும்.

சுற்றத்தார் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்.
(524)
விளக்கம்:

சுற்றாத்தாரால் தான் சூழ்ந்திருக்கும்படியாக வாழ்தலே, ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் அடைந்த பயனாக இருக்க வேண்டும்.

கொடுத்தாலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தான் சுற்றப் படும்.
(525)
விளக்கம்:

சுற்றத்தார்க்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலும், அவரோடு இனிதாகப் பேதலும் செய்வானாயின், அவன் சுற்றத்தார் பலராலும் சூழப்படுவான்.

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.
(526)
விளக்கம்:

மிகுதியாகக் கொடுக்கும் இயல்புள்ளவனாயும், சினத்தை விரும்பாதவனாயும் ஒருவன் இருந்தால், அவனைப் போல் சுற்றம் உடையவர் உலகில் யாரும் இல்லை.

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள.
(527)
விளக்கம்:

காக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி உடனிருந்தே உண்ணும், அத்தகைய இயல்பினருக்கே சுற்றப்பெருக்கமும் உண்டாகும்.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
(528)
விளக்கம்:

எல்லோரையும் ஒரே தன்மையாகப் பொதுப்படையாக நோக்காது, அவரவர் தகுதிக்கேற்ப நோக்கிச் செய்வன செய்தால், அச்சிறப்பைக் கருதிச் சுற்றத்தார் சூழ்வர்.

தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
(529)
விளக்கம்:

சுற்றத்தாராக இருந்து தன்னைப் பிரிந்தவர்கள், பிரிவதற்கு ஏற்பட்ட காரணத்தை நீக்கிவிட்டால், மீண்டும் அவர்களே வந்து சேர்ந்திப்பார்கள்.

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
(530)
விளக்கம்:

காரணம் இல்லாமல் தன்னிடம் இருந்து பிரிந்து, பின் ஒரு காரணத்தால் தன்பால் வந்த உறவினனை, அரசன் அதைச் செய்து அவனைத் தழுவிக் கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment