Sunday, May 31, 2009

57. வெருவந்த செய்யாமை

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
(561)
விளக்கம்:

ஒருவனுடைய குற்றத்தைத் தகுந்த வழிகளாகவே ஆராய்ந்து, மீளவும் அதைச் செய்யாதபடி, குற்றத்திற்குத் தகுந்தபடி தண்டிப்பதே வேந்தன் கடமையாகும்.


கடிதொச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
(562)
விளக்கம்:

நெடுங்காலம் ஆக்கம் நீங்காமல் இருத்தலை விரும்புகிறவர்கள், குற்றஞ் செய்தவரைத் தண்டிக்கும்போது, கடுமையைக் காட்டினாலும் அளவோடு தண்டிப்பாராக.

வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
(563)
விளக்கம்:

கடிகள் அச்சம் அடையும் செயல்களைச் செய்கின்ற கொடுங்கோல் அரசன், மிகவும் விரைவாகவே கெட்டுப்போய் அழிவை அடைவான்.

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
(564)
விளக்கம்:

எம் அரசன் கடுமையானவன் என்று மக்கள் சொல்லும் பழிச்சொல்லுக்கு ஆளாகிய வேந்தன், தன் ஆயுளும் விரைவில் கெட்டுப் போக, அழிவை அடைவான்.

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து.
(565)
விளக்கம்:

எளிதாகக் காணமுடியாத தன்மையும், கமையான முகங்காட்டும் இயல்பும் உள்ளவனின் பெருஞ்செல்வம், பேயால் கவனித்துக் காக்கும் புதையல் போன்றதாகும்.

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
மநீடின்றி ஆங்கே கெடும்.
(566)
விளக்கம்:

கடுமையான பேச்சும், இரக்கமற்ற தன்மையும் உடையவனானால், அவ்வரசனது பெருஞ்செல்வமும் நீடித்திருக்காமல் தேய்ந்து, அப்போதே கெடும்.

கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
(567)
விளக்கம்:

கடுமையான சொல்லும், முறைகடந்த தண்டனையும், அவ்வரசனுடைய பகைவரை வெல்லும் வலிமையைத் தேய்த்து அழிக்கும் அரமாகும்.

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறின் சிறுகுந் திரு.
(568)
விளக்கம்:

அமைச்சர் ணிதலானவரோடு கலந்து ஆராயந்து செய்யாமல், தன் சினத்தின் வழியிலேயே சென்று பிறரைச் சீறுவானனால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெரு வந்து வெய்து கெடும்.
(569)
விளக்கம்:

போர் வருவதற்கு முன்பாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத வேந்தன், அது வந்த காலத்தில், பாதுகாப்பு இல்லாமல் அஞ்சியவனாக, அழிந்து போவான்.

கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலைக்குப் பொறை.
(570)
விளக்கம்:

கொடுங்கோல் ஆட்சியானது மூடர்களையே தனக்குத் துணையாக்கிக் கொள்ளும். அந்த ஆட்சியை அல்லாமல் பூமிக்குப் பாரம் வேறு யாதும் இல்லை.

No comments:

Post a Comment