Sunday, May 31, 2009

116. பிரிவாற்றாமை

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்லரவு வாழ்வார்க் குரை.
(1151)
விளக்கம்:

பிரிந்து செல்லாமை உண்டானால் எனக்குச் சொல்வாயாக; பிரிந்துபோய் விரைந்து திரும்பி வருவது பற்றியானால், அது வரையிலும் வழ்ந்திருப்பவருக்குச் சொல்வாயாக.


இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தாற் புணர்வு.
(1152)
விளக்கம்:

அவர் அன்பான பார்வையும் முன்னர் இனிதாய் இருந்தது; இப்பொழுதோ, பிரிவை நினெத்து அஞ்சுகின்ற துன்பத்தால், அவர் கூடுதலும் துன்பமாகத் தோன்றுகின்றது.

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.
(1153)
விளக்கம்:

அறிவு உடையவரிடமும், தாம் காதலித்தவரைப் "பிரிவது" ஒரு சமயத்தில் உள்ளதனால், அவர், பிரியேன் என்று சொன்ன சொல்லெயும் என்னால் நம்ப முடியவில்லெ.

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.
(1154)
விளக்கம்:

அருள் செய்த காலத்தில், "அஞ்சாதே" என்று கூறி என் அச்சத்தைப் போக்கியவரே, இப்போது விட்டுப்பிரிவாரானால், அவரை நம்பிய நமக்கும் குற்றம் ஆகுமோ.

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.
(1155)
விளக்கம்:

என்னைக் காப்பதானால் காதலர் பிரியாதபடி தடுத்துக் காப்பாயாக. அவர் பிரிந்து போய்விட்டார் என்றால் மீண்டும் அவரைக் கூடுதல் என்பது நமக்கு அரிதாகும்.

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.
(1156)
விளக்கம்:

'பிரிவைப் பற்றிச் சொல்லும் கொடியவர் அவரானால்', அவர் மீண்டும் திரும்பி வந்து நமக்கு இன்பம் தருவார் என்னஉம் நம் ஆசையும், பயன் இல்லாததே .

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிறவா நின்ற வளை
(1157)
விளக்கம்:

நம்மை தலைவன் பிரிந்து போயினான் என்பதை, மெலிந்த நம் முன் கையிலிருந்து சுழலும் வளைகள் ஊரறிய எடுத்துக் காட்டி தூற்ற மாட்டவோ?

இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு .
(1158)
விளக்கம்:

தோழியர் எவருமே இல்லாத ஊரில் குடியிருப்பது மிகத் துன்பமானது, இனிய காதலரைப் பிரிந்து தனித்திருப்பது, அதை விட மிகவும் துன்பமானது.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ
(1159)
விளக்கம்:

தீ தன்னைத் தொட்டால் தான் சுடும். ஆனால், தலைவன் தலைவி பிரிந்து எத்தனைத் தொலைவில் இருந்தாலும் சுடும் ஆற்றல் கொண்டது காமநோய்.

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்.
(1160)
விளக்கம்:

காதலர் பிரிவைப் பொறுத்து, அதனால் வரும் நலிவையும் விலக்கி, பிரிவுத் துயரையும் தாங்கி அதன் பின்னரும் உயிரோடு இருக்கும் மகளிர் உலகத்தில் பலர்.

No comments:

Post a Comment