Sunday, May 31, 2009

124. உறுப்புநலன் அழிதல்

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின காண்.
(1231)
விளக்கம்:

இந்தத் துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவாகச் சென்று விட்ட காதலரை நினைத்து அழுவதனாலே, என் கண்கள், தம்அழகிழந்து நறுமலர்களுக்கு நாணின.


நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
(1232)
விளக்கம்:

பசலை நிறத்தைப்பெற்று நீரைச் சொரியும் கண்கள், தம்மை முன்பு விரும்பிய நம் காதலர், இப்போது அன்பு செய்யாததைப்பிறருக்கும் சொல்வன போல் உள்ளனவே.

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
(1233)
விளக்கம்:

காதலரோடு கூடியிருந்த நாள்களிலே பூரித்திருந்த தோள்கள் மெலிவடைந்து, அவருடைய பிரிவைப் பிறருக்கு நன்றாகத்தெரிவிப்பவை போல் உள்ளனவே.

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
(1234)
விளக்கம்:

தமக்குத் துணையான காதலரைப் பிரிந்ததால், தம் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், தம் பசிய தொடிகளையும் கழலச்செயகின்றனவே.

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
(1235)
விளக்கம்:

தொடிகளும் கழன்று வீழ, தம் பழைய அழகும் கெட்டுப் போன தோள்கள், நம் துன்பத்தை அறியாத கொடியவரின் கொடுமையைஊரறிய சொல்கின்றனவே.

தொடியோடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
(1236)
விளக்கம்:

தொடிகள் கழன்று வீழ்ந்து, தோள்களும் மெலிந்ததனால், காண்பவர் மனம் நொந்தவராக, அவரைக் கொடியவர் என்றுகூறக்கேட்டு, யானும் வருந்துவேனே.

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோள் பூசல் உரைத்து.
(1237)
விளக்கம்:

நெஞ்சமே! கொடியவராகிவிட்ட காதலருக்கு என் வாடிய தோள்களின் ஆரவாரத்தை எடுத்துச் சொல்லி உதவியைச்செய்ததனனால் நீயும் பெருமை அடையாயோ.

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
(1238)
விளக்கம்:

தழுவிய கைகளைத் தளர்த்திய அப்பொழுதிலேயே, பசிய தொடியணிந்த இப் பேதைமை உடையவளின் நெற்றியும் பசலைநிறத்தை அடைந்து விட்டதே.

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
(1239)
விளக்கம்:

முயக்கத்திற்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிதான மழை போன்ற கண்களும் அழகிழந்து பசலை நிறம்அடைந்து விட்டனவே.

கண்ணின் பசப்போ பருவால் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
(1240)
விளக்கம்:

காதலியின் ஒளியுள்ள நெற்றி பசலை நிறம் அடைந்ததைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலை நிறமும் மேலும் பெருதுன்பம்அடைந்துவிட்டது.

No comments:

Post a Comment