Sunday, May 31, 2009

77. படை மாட்சி

உறுப்பமைந்து ஊரஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.
(761)
விளக்கம்:

நால்வகை உறுப்புகளாலும் முறையாக அமைந்து, களத்திற்படும் துன்பங்கட்கு அஞ்சாமல் பகைவரை வெல்லும் படையே, செல்வங்களுள் சிறந்த செல்வம்.


உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக்கு அல்லால் அரிது.
(762)
விளக்கம்:

நால்வகை உறுப்புகளாலும் முறையாக அமைந்து, களத்திற்படும் துன்பங்கட்கு அஞ்சாமல் பகைவரை வெல்லும் படையே, செல்வங்களுள் சிறந்த செல்வம்.

ஒலித்தக்கால் எல்லாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.
(763)
விளக்கம்:

பகைப்படைகள் எலிகளைப்போலக் கடலாகத் திரண்டு வந்து ஆரவாரித்தாலும், சிறிய தொல்படை நாகத்தைப் போல மூச்சுவிட்டதும், அது முற்றவும் அழிந்துபோம்.

அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
(764)
விளக்கம்:

மனத்தின் உறுதியிலே அழிவற்றதாய், பகைவரது வஞ்சனைகளுக்கு உட்படாததாய், வழிவழித் தொடர்ந்து வந்த வன்கண்மை உடையதாய் விளங்குவதே சிறந்த படை.

கூற்றடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.
(765)
விளக்கம்:

கூற்றம் சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், அதனோடும் சென்று பொருந்தி, எதிர்த்துப் போரிட்டு வெல்லும் ஆற்றல் உடையதே சிறந்த படை ஆகும்.

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
(766)
விளக்கம்:

மறப்பண்பும், மானவுணர்வும், நன்னெறியே பற்றிச் செல்லுதலும், மன்னனால் தெளியப்பட்ட சிறப்பும் என்னும் நான்கும் படைக்குச் சிறந்த பாதுகாப்பு ஆகும்.

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை யறிந்து.
(767)
விளக்கம்:

மேல்வந்த போரைத் தாங்கிநின்று, பகைவரை மேற்சென்று வெல்லும் வகைகளை ஆராய்ந்து, அவர்களின் தூசிப்படையைத் தாக்கி அழித்து மேற்செல்வதே படை ஆகும்.

அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.
(768)
விளக்கம்:

போரிடுகின்ற தறுகண்மையும், அதற்கு வேண்டிய ஆற்றலும் இல்லாதிருந்தாலும், ஒரு படை தனது அணி வகுப்பினாலேயே பகைவரை வெற்றி அடைந்து விடும்.

சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
(769)
விளக்கம்:

தேய்ந்து சிறுகுதலும், மனம் நீங்காத வெறுப்பும், பொருளில்லாத வறுமையும் இல்லாமலிருந்தால், அந்தப் படை தவறாமல் எந்தப் பகையையும் வெற்றி கொள்ளும்.

நிலமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
(770)
விளக்கம்:

நிலையான மறவர்களை மிகுதியாக உடையதானாலும், ஒரு படையானது, தன் தலைவர்கள் திறமையில்லாதவர்களாக இருந்தால் பயனற்று அழிந்து விடும்.

No comments:

Post a Comment