Sunday, May 31, 2009

80. நட்பாராய்தல்

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
(791)
விளக்கம்:

நன்றாக ஆராயமல் நட்பு செய்வதைவிடக் கெடுதி எதுவும் இல்லை. அப்படி நட்பு செய்த பின் கைவிடுதல், நட்பை விரும்புவோரால் முடிவதும் இல்லை.


ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
(792)
விளக்கம்:

பல வகைகளிலும் ஒருவனைப் பற்றி ஆராயந்து தெளிந்த பின் கொள்ளாத நட்பானது, தானே முடிவில் சாக வேண்டிய அளவுக்கு பெரும் துயரத்தைத் தந்துவிடும்.

குனனும் குடிமையும் குற்றமும் குன்றா
இன்னும் அறிந்தியாக்க நட்பு.
(793)
விளக்கம்:

ஒருவன் குணத்தையும், அவன் பிறந்த குடியின் சிறப்பையும், அவன் குற்றம் குறைகளையும், நிலையாக அவனுடன் இருக்கும் தோழர்களையும் அறிந்தே நட்பு செய்ய வேண்டும்.

குடிப்பிறந்து தன்கட் பனிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
(794)
விளக்கம்:

உயர்ந்த குடியிலே பிறந்தவனும், பழிச்சொற்களுக்கு வெட்கப்படுகிறவனும் ஆகிய ஒருவனை எந்தப் பொருளைக் கொடுத்தாவது நட்பாக்கிக் கொள்ள வேண்டும்.

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.
(795)
விளக்கம்:

உயர்ந்த குடியிலே நாம் தவறு செய்யும்பொழுது கடுமையாகப் பேசியும், மேலும் செய்யாதபடி தடுத்தும், உலக நடையை அறிவதற்கு வல்லவரின் நட்பினையே கொள்ள வேண்டும்.

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
(796)
விளக்கம்:

ஒருவனுக்கு கெடுதல் உண்டாவதாலும் ஒருவகை நன்மை உண்டு. நண்பரின் உறவை அளந்து அறியும் அளவுகோலாக விளங்குவது தான் அது.

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
(797)
விளக்கம்:

ஒருவனுக்கு ஊதியமாவது யாதென்றால், அறிவற்றவர்களோடு அறியாமல் கொண்ட நட்பினை, அவரைப் பற்றித் தெரிந்த அப்பொழுதிலேயே விட்டுவிடுதல் ஆகும்.

உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றுப்பார் நட்பு.
(798)
விளக்கம்:

உள்ளம் சிறுமை கொள்ளும்படி எதனையுமே நண்பனைக் குறித்து எண்ணக் கூடாது, அல்லல்படும் காலத்திலேயே கைவிட்டுப் போனவர் நட்பையும் விட்டுவிட வேண்டும்.

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்.
(799)
விளக்கம்:

நாம் கெட்டுப் போன காலத்திலே, நம்மைக் கைவிட்டு விலகிப் போனவரின் நட்பைப் பற்றிச் சாகிற காலத்திலே நினைத்தாலும், நம் உள்ளம் வேதனையால் எரியும்.

மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
(800)
விளக்கம்:

குற்றம் இல்லாத நல்லோரின் நட்பையே கொள்ள வேண்டும். தகுதியில்லாத கீழோரின் நட்பை ஒன்றைக் கொடுத்தாவது விட்டுவிட வேண்டும்.

No comments:

Post a Comment