Sunday, May 31, 2009

37. அவா அறுத்தல்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
(361)
விளக்கம்:

எல்லா உயிருக்கும் எக்காலத்திலும் பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்றதான வித்து, "அவா" என்பதுதான் என்று ஆன்றோர் கூறுவர்.


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
(362)
விளக்கம்:

ஒருவன் எதையேனும் விரும்புவதானால், பிறவாமை என்பதையே விரும்ப வேண்டும்; அந்த நிலை அவா இல்லாத நிலையை விரும்பினால் வரும்.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல்.
(363)
விளக்கம்:

அவாவற்ற தன்மை போலச் சிறந்த செல்வம் இவ்வுலகில் யாதும் இல்லை; எவ்விடத்தும் அதற்கு இணையான தான செல்வமும் யாதும் இல்லை.

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
(364)
விளக்கம்:

தூய்மையான நிலை என்பது அவாவில்லாத நிலையே ஆகும்; அந்த நிலை, வாய்மையையே விரும்பி நடந்தால் தானாகவே நம்மை வந்து சேரும்.

அற்றவர் என்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
(365)
விளக்கம்:

பற்று அற்றவர் என்பவர்கள் அவா அற்றவரே; அவா அறாத மற்றையவர் எல்லாரும் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.
(366)
விளக்கம்:

ஒருவனை அவன் தளர்ச்சி கண்டு வஞ்சிப்பது அவா ஆகும்; அதனால், அவாவுக்குப் பயந்து ஒதுங்கி வாழ்வதே மேன்மையான அறநெறி ஆகும்.

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.
(367)
விளக்கம்:

அவாவினை முழுவதும் அறுத்து விட்டால், கெடாமல் வாழ்வதற்கான நல்வினைகள், தான் விரும்பியபடியே வந்து ஒருவனுக்கு வாய்க்கும்.

அவாவில்லார்க் கில்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
(368)
விளக்கம்:

அவா இல்லாதவருக்குத் துன்பம் என்பதும் இல்லையாகும்; அவா உள்ளதானால் துன்பமும் ஒழியாமல் மேன்மேலும் வந்து கொண்டே இருக்கும்.

இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.
(369)
விளக்கம்:

அவா என்கின்ற துன்பத்தினுள் கொடிய துன்பமானது கெடுமானால், வாழ்வில் இன்பம் இடையறாமல் வந்து வாய்த்துக் கொண்டிருக்கும்.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
(370)
விளக்கம்:

ஒருபோதும் நிரம்பாத அவாவினைக் கைவிட்டால், அந்தப் பொழுதிலேயே பெரிதான இன்பவாழ்வை அந்நிலைமையானது தானாகவே தந்துவிடும்.

No comments:

Post a Comment