Sunday, May 31, 2009

78. படைச் செருக்கு

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின் றவர்.
(771)
விளக்கம்:

பகைவரே, என் தலைவனின் முன்னே எதிர்த்து வந்து நில்லாதீர். அவன் முன் எதிர்த்து வந்து நின்று களத்தில் வீழ்ந்து பட்டு நடுகற்களாக நிற்பவர் மிகப் பலர்.


கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
(772)
விளக்கம்:

காட்டு முயலைக் குறி தவறாமல் எய்து வீழ்த்திக் கொன்ற அம்பினைக் காட்டிலும், யானை மேல் எறிந்து குறி தவறிய வேலினைத் தாங்குதலே படை மறவருக்கு இனிதாகும்.

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
(773)
விளக்கம்:

பேராண்மை என்பது பகைவர்க்கு அஞ்சாமல் எதிர்நின்று போரிடும் ஆண்மையே. அவருக்கு ஒரு கேடு வந்தவிடத்து உதவி நிற்கும் ஆண்மையோ அதனினும் சிறந்ததாகும்.

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
(774)
விளக்கம்:

தன் கைவேலினைக் களிற்றின் மீது எறிந்து விட்டுப் படைக்கலமின்றி வருபவன், தன்னுடம்பில் தைத்திருந்த பகைவரின் வேலைப் பறித்து மகிழ்ச்சி அடைவான்.

விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
(775)
விளக்கம்:

பகைவர் மீது சினந்து பார்த்த கண்கள், அவர் தம் கைவேலை எறிந்த காலத்தினும், வெகுட்சியை மாற்றி இமைக்குமானால் மறவருக்கு இழிவு தரும் அல்லவோ?

விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் நாளை எடுத்து.
(776)
விளக்கம்:

கழிந்துபோன தன் வாழ்நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்து, விழுப்புண் படாத நாட்களை எல்லாம், தான் தவறவிட்ட நாட்களுள் சேர்ப்பவனே படை மறவனாவான்.

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
(777)
விளக்கம்:

உலகைச் சூழ்ந்து பரவும் புகழையே விரும்பி, உயிரை வெறுத்துப் போரிடும் ஆண்மையுள்ள மறவரின் காலிலே விளங்கும் கழல்களே அழகு உடையவாகும்.

உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினுஞ்சீர் குன்றல் இலர்.
(778)
விளக்கம்:

போர்க்களத்திலே தம் உயிருக்கும் அஞ்சாமல் போரிடும் படை மறவர்கள், தம் அரசனே தடுத்தாலும் தம் மனவூக்கத்தில் சிறிதும் குறைய மாட்டார்கள்.

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
(779)
விளக்கம்:

தாம் உரைத்த சூளுரையிலிருந்து தப்பாமல் போரினைச் செய்து, அதனிடத்தில் சாகிறவரை, எவர் தாம் சூளுரை பிழைத்ததற்காகத் தண்டிப்பவர்கள்.

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.
(780)
விளக்கம்:

தம்மைப் பேணியவரின் கண்கள் நீர் சிந்தும்படியாகக் களத்தில் சாவைத் தழுவினால், அத்தகைய சாவு ஒருவன் இரந்தும் கொள்ளத் தகுந்த சிறப்பினை உடையதாகும்.

No comments:

Post a Comment