Sunday, May 31, 2009

121. நினைந்தவர் புலம்பல்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.
(1201)
விளக்கம்:

நினைத்தாலும் தீராத பெருமகிழ்ச்சியை எமக்குச் செய்வதனால், உண்டால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளினும் காமமே உலகத்தில்இனிமை தருவதாகும்.


எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று இல்.
(1202)
விளக்கம்:

யாம் விரும்புகின்ற காதலரை நினைத்தாலும், பிரிவுத் துன்பம் இல்லாமல் போகின்றது; அதனால், காமமும் எவ்வளவானாலும்ஒரு வகையில் இனிமையானதே.

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
(1203)
விளக்கம்:

தும்மல் எழுவதுபோலத் தோன்றி எழாமல் அடங்குகின்றதே. அதனால், நம் காதலர் நினைப்பவர் போலிருந்தவர் நம்மை மறந்துநினையாமற் போயினாரோ.

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.
(1204)
விளக்கம்:

எம் நெஞ்சில் காதலராகிய அவர் எப்போதுமே உள்ளனர்; அது போலவே அவருடைய நெஞ்சில், நாமும் நீங்காமல் எப்போதும்நிறைந்திருக்கின்றோமோ?

தந்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எந்நெஞ்சத் தோவா வரல் .
(1205)
விளக்கம்:

தம்முடைய நெஞ்சில் எம்மை வர விடாமல் காவல் செய்து கொண்ட நம் காதலர், நம் உள்ளத்தில் தாம் ஓயாமல் வருவதைப்பற்றிவெட்கப்பட மாட்டாரோ?

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.
(1206)
விளக்கம்:

காதலரொடு இன்பமாயிருந்த அந்த நாட்களின் நினைவால்தான் நான் உயிரோடிருக்கிறேன்; வேறு எதனால்தான் நான் அவரைப்பிரிந்தும் உயிர் வாழ்கின்றேன்?

மறப்பின் எவனாவன் மற்கொல் மறிப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.
(1207)
விளக்கம்:

அவரை மறந்தால் என்ன ஆவேனோ? அதனால், அவரை மறப்பதற்கும் அறியேன்; மறக்க நினைத்தால் அந்த நினைவும் என்உள்ளத்தைச் சுடுகின்றதே

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.
(1208)
விளக்கம்:

காதலரை எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அவர் என் மேல் சினந்து கொள்ளவே மாட்டார்; நம் காதலர் நமக்குச் செய்யும்சிறந்த உதவியே அதுதான்.

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.
(1209)
விளக்கம்:

'நாம் இருவரும் வேறானவர் அல்லேம்' என்று சொல்லும் அவர், இப்போது அன்பில்லாமல் இருப்பதை மிகவும் நினைந்து, என்இனிய உயிரும் அழிகின்றதே.

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
(1210)
விளக்கம்:

மதியமே! என் உள்ளத்தில் பிரியாதிருந்து, என்னைப் பிரிந்து சென்ற காதலார என் கண்ணால் தேடிக் காண்பதற்காக, நீயும்வானத்தில் மறையாமல் இருப்பாயாக.

No comments:

Post a Comment