Tuesday, May 26, 2009

22. ஒப்புரவு அறிதல்

22. ஒப்புரவு அறிதல்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ உலகு.
(211)
விளக்கம்:

மழைக்கு இவ்வுலகம் என்ன கைம்மாறு செய்யக் கூடும்? உலக நன்மையைக் கருதிச் சான்றோர் செய்யும் கடமைகளும் அவ்வாறே, கைம்மாறு விரும்பாதவைகளே.


தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
(212)
விளக்கம்:

தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம், தக்கரவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்.

புத்தேன் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
(213)
விளக்கம்:

ஒப்புரவைரப் போலப் பலருக்கும் நன்மையான வேறொரு பண்பை இவ்வுலகதிலும், தேவர்களின் உலகத்திலும் பெறுவது அருமை ஆகும்.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்.
(214)
விளக்கம்:

'எவ்வுயிரும் ஒத்த தன்மையானது' என்று அறிந்து உதவி செய்து வாழ்பவனே உயிர் வாழ்கின்றவன். ஒப்புரவற்ற மற்றவன், செத்தவருள் வைத்துக் கருதப்படுவான்.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
(215)
விளக்கம்:

உலகினர் எல்லோரும் விரும்புமாறு, உதவி செய்து வாழும் பேரறிவானுடைய செல்வமானது, ஊருணியிலே நீர் நிரம்பினால் போலப் பலருக்கும் பயன்படுவதாகும்.

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
(216)
விளக்கம்:

செல்வம் நல்ல பண்பு உடையவனிடம் சென்று சேர்தலானது, ஊருக்குள்ளே பழமரம் பழுத்திருப்பது போலப் பலருக்கும் பயன் தருவதாகும்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
(217)
விளக்கம்:

செல்வமானது பெருந்தகுதி உடையவனிடம் சேர்தல், பிணி தீர்க்கும் மருந்தாகிப் பயன்தரத் தவறாத மருந்து மரம் போல எப்போதும் பயன் தருவதாகும்.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
(218)
விளக்கம்:

ஒப்புரவு செய்தலாகிய கடமையை அறிந்த அறிவாளர்கள், அதற்கேற்ற பொருள் வசதி இல்லாத காலத்திலும் முடிந்த வரை உதவத் தளர மாட்டார்கள்.

நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா ஆறு.
(219)
விளக்கம்:

ஒப்புரவாகிய நல்ல பண்பை உடையவன் பொருளற்று வறுமை உடையனாதல், செய்யத் தகுந்த உதவிகளைச் செய்யவியலாது வருந்துதலே ஆகும்.

ஒப்புரவி னால் வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து.
(220)
விளக்கம்:

ஒப்புரவினாலே கேடு வரும் என்றால், அந்தக் கேடானது தன்னை விற்றாவது ஒருவன் பெறுவதற்குத் தகுந்த சிறப்பை உடையதாகும்.

No comments:

Post a Comment