Tuesday, May 26, 2009

14. ஒழுக்கம் உடைமை

14. ஒழுக்கம் உடைமை

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
(131)
விளக்கம்:

ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதாகும். அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகச் சான்றோரால் காக்கப்படும்.


பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
(132)
விளக்கம்:

வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும். பலவும்ஆராய்ந்து கைக்கொண்டு தெளிந்தாலும்,ஒழுக்கமே உயிருக்குத் துணையாகும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
(133)
விளக்கம்:

ஒழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த குடிபிறப்பின் தன்மை ; ஒழுக்கம் கெடுதல் இழிந்த பிறப்பின் தன்மையாகி விடும்.

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
(134)
விளக்கம்:

கற்றதை மறந்தாலும் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், வேதமோதுவான் பிறப்பால் வந்த உயர்வு அவன் ஒழுக்கம் குன்றினால்கெடும்.

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
(135)
விளக்கம்:

பொறாமை உடையவனிடத்திலே ஆக்கம் அமையாதது போல, ஒழுக்கம் இல்லாதவன் வாழக்கையிலும் உயர்வு இல்லை

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் பாடுபாக் கறிந்து.
(136)
விளக்கம்:

மன வலிமை உடையவர், ஒழுக்கம் குன்றுதலால் குற்றம் நேரிடுதலை அறிந்து, ஒழுக்கத்திலிருந்து ஒரு போதுமே பிறழ மாட்டார்கள்.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
(137)
விளக்கம்:

ஒழுக்கத்தால் எல்லாரும் மேன்மை அடைவார்கள்; ஒழுக்கக் கேட்டால் அடையத்தகாத பழியை அடைவார்கள்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
(138)
விளக்கம்:

நல்ல ஒழுக்கமானது இன்பமான நல்வாழ்வுக்கு வித்தாக இருக்கும் ; தீய ஒழுக்கமோ எக்காலத்தும் துன்பத்தையே தரும்.

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
(139)
விளக்கம்:

தீய சொற்களைத் தவறியும் தம் வாயினாற் சொல்லும் குற்றம், நல்ல ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒருபோதும் பொருந்தாத பண்பாகும்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலர் தார்.
(140)
விளக்கம்:

உலகத்தவரோடு பொருந்தி ஒழுகும் தன்மையை அறியாதவர், பல நூல்களை கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர்.

No comments:

Post a Comment