Sunday, May 31, 2009

32. இன்னா செய்யாமை

சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
(311)
விளக்கம்:

சிறப்பை தருகின்ற பெருஞ்செல்வமே பெற்றாலும், பிறருக்கு துன்பம் செய்யாதிருத்தலே குற்றமற்ற அறிவாளரின் கொள்கையாகும்.


கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
(312)
விளக்கம்:

வஞ்சம் கொண்டு ஒருவன் துன்பம் செய்தபோதும், திரும்ப அவனுக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்யாதிருத்தலே குற்றமற்ற அறிவாளரின் கொள்கை.

செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.
(313)
விளக்கம்:

எதுவும் செய்யாத போதிலேயே தீமை செய்தவருக்கும், பதிலுக்குத் துன்பத்தைச் செய்தால், அது பின்னர் மீளாத் துயரத்தையே தரும்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
(314)
விளக்கம்:

துன்பம் செய்தவரைத் தண்டித்தல் என்பது, அவர் தம் செய்கையை நினைத்து வெட்கப்படும் படியாக அவருக்கு நன்மைகளைச் செய்துவிடுதல் ஆகும்.

அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
(315)
விளக்கம்:

பிறிதோர் உயிரின் துன்பத்தை தன் துன்பம் போலக் கொள்ளாத இடத்தில், அறிவினாலே ஆகும் பயன்தான் ஏதும் உளதாகுமோ?

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.
(316)
விளக்கம்:

துன்பம் தருவது எனத் தான் உணர்ந்த ஒரு செயலைப் பிறரிடத்தே செய்தலை ஒருவன் எப்போதும் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
(317)
விளக்கம்:

எவ்வளவினது ஆனாலும், எக்காலத்தில் ஆனாலும், எவருக்கும், மனத்தினாலும் பொருந்தாத துன்பங்களைச் செய்யாமலிருத்தலே சிறப்பு.

தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.
(318)
விளக்கம்:

தன் உயிர்க்குத் துன்பமாதலைத் தான் அறிந்து வருந்தும் ஒருவன், மற்றைய உயிர்களுக்குத் துன்பத்தைச் செய்தல் என்பது, என்ன அறியாமையாலோ?

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.
(319)
விளக்கம்:

முற்பகலில் பிறருக்குத் துன்பத்தைச் செய்தால், பிற்பகலில் தமக்குத் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும் என்பதை அறிதல் வேண்டும்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
(320)
விளக்கம்:

துன்பம் தருவன எல்லாம் துன்பம் செய்தவரின் மேல் சென்று சேர்வன. ஆகவே, துன்பப்படாமலிருப்பதை விரும்புகிறவன் பிறருக்குத் துன்பம் செய்யாதிருப்பர்.

No comments:

Post a Comment