Wednesday, May 27, 2009

26. புலால் மறுத்தல்

26. புலால் மறுத்தல்

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுன்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
(251)
விளக்கம்:

தன் சதையைப் பெருக்குவதற்குத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன், எப்படி உயிர்களுக்கு எல்லாம் அருள் செய்பவனாக இருக்க முடியும்?


பொருளாட்சி போற்றாதர்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
(252)
விளக்கம்:

பொருள் உடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றாதவருக்கு இல்லை. அவ்வாறே, அருள் உடையவர் ஆகும் தகுதி ஊனைத் தின்பவருக்கு இல்லை.

படைகொண்டார் நெஞ்சம் போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
(253)
விளக்கம்:

ஒன்றன் உடலைச் சுவையாக உண்டவரது மனம். கொலைக் கருவியை ஏந்தினவரது நெஞ்சத்தைப் போலப் பிறவுயிருக்கு அருள் செய்தலைப் பற்றியே நினையாது.

அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.
(254)
விளக்கம்:

கொல்லாமையே அருள் ஆகும்: ஓர் உயிரைக் கொல்லுதலோ அருளில்லாத தன்மை ; அதன் ஊனைத் தின்னலோ சற்றும் முறையில்லாத செயல் ஆகும்.

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊணுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
(255)
விளக்கம்:

உயிர்களின் நிலைத்த வாழ்வு ஊணுண்ணாத இயல்பில்தான் உள்ளது. ஊன் உண்டால், நரகம் அவனை வெளியேவிட ஒரு போதும் தன்னுடைய கதவைத் திறவாது.

தினல்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.
(256)
விளக்கம்:

புலாலைத் தின்னும் பொருட்டாக உயிர்களை உலகத்தார் கொல்லாதிருந்தால், எவரும் விலைப்படுத்தும் பொருட்டாக உ.யிரைக் கொன்று ஊனைத் தரமாட்டார்கள்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின்.
(257)
விளக்கம்:

புலால் பிறிதோர் உயிரின் புண் என்று உணர்பவர், அதனைத் தாம் பெற்ற போதும் உண்ணாமல் இருக்கும் நல்ல ஒழுக்கம் உடைய இயல்பினராதல் வேண்டும்.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
(258)
விளக்கம்:

பிறிதோர் உயிரின் உடலிடத்திலிருந்து பிரிந்துவந்த ஊனை, குற்றத்திலிருந்து விடுபட்ட அறிவாளர்கள் ஒரு போதும் உண்ணவே மாட்டார்கள்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.
(259)
விளக்கம்:

அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைக் காட்டிலும், ஒன்றன் உயிரைக் கொன்று, அதன் உடலைத் தின்னாமலிருநத்தல் மிகவும் நன்மையானதாகும்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
(260)
விளக்கம்:

கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை, எல்லா உயிர்களும் கை தொழுது தெய்வமாக நினைத்துப் போற்றும்.

No comments:

Post a Comment